திங்கள், 1 டிசம்பர், 2025

தினம் ஒரு ஆலயம் – அதிசயம் 4. இராமநாதசுவாமி கோயில் – இராமநாதபுரம்


தினம் ஒரு ஆலயம் – அதிசயம்                                 

4. இராமநாதசுவாமி கோயில் – இராமநாதபுரம்


இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில்  தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். 


இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் ஒரு சிவன் கோவில். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்றது இத்தலம் . 


இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் தமிழகத்தில் உள்ள ஒன்றே ஒன்றாகக் இராமேஸ்வரம் கருதப்படுகிறது. 


இராமபிரான் சீதையுடன் புஷ்பவிமானத்தில் இலங்கையிலிருந்து அயோத்திக்குச் செல்லும் போது இராவணனைக் கொன்ற பாவம் தீர  சீதை மணலால் செய்த ராமலிங்கர் (மூலவர்) மற்றும் கைலாசத்தில் இருந்து அனுமன் கொண்டுவந்த விசுவலிங்கத்தை (காசிவிஸ்வநாதர் சன்னிதியில் உள்ளது) பிரதிஷ்டை செய்து வழிபட்டார்  என்று இராமாயணம், சிவபுராணம், பத்மபுராணம், முதலியவற்றில் கூறப்பட்டிருக்கிறது. 


எவ்வாராயினும் இராமர் சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார் என்பதில் கருத்து வேற்றுமை இல்லை.


இலங்கைக்குச் செல்ல இராமபிரான் பாலம் கட்டிய இடம் சேது பந்தனம் (பவளப்பாறைகள் நிறைந்த இடம்). 


கிடைத்த தகவல்படி கோயிலில் தற்போதைய கற்பகிரகம் கி.பி.1173ல் இலங்கையை சேர்ந்த பராக்கிரம பரகு என்பவர் கட்டியதாக அறியப்படுகிறது. பின்னர் பல பாண்டிய மன்னர்கள் மற்றும் சேது மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டு இன்றைய நிலையில் உள்ளது.


கர்ப்பகிரகத்தில் உள்ள ஆதிசங்கரர் பிரதிசுடை செய்த ஸ்படிக இலிங்கத்திற்கு நாள் தோறும் காலை 5 மணி முதல் ஆறு மணி வரை பாலாபிசேகம் செய்யப்படுகிறது.


இங்கு கோயில் கொண்டுள்ள அம்மன் பெயர் பர்வத வர்தனி அம்மன். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது. 


சக்தி பீடங்களில் இத்தலம், சேதுபீடம் ஆகும்

இது பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம்


அதிசயம் 1:

சுற்றிலும் நீர் இருக்கும் கடலின் நடுவே மலையே இல்லாத இந்த தீவில் இவ்வளவு பிரமாண்டமான கற்களால் ஆன இவ்வளவு பெரிய கோயில் எப்படி கட்டப்பட்டது? எங்கிருந்து இதற்கான இவ்வளவு கற்கள் எப்படி கொண்டுவரப்பட்டதுன்ன்னு யோசித்தால் இதன் அதிசயம் ஆச்சரியம் தமிழரின் சாதனை புரியும்.


அதிசயம் 2:


அங்கே இராமபிரான் தன் பக்தர்களின் தாகம் தீர்க்க வில்லினால் தோண்டிய தீர்த்தம்  தனுஷ்கோடி கடலுக்கு நடுவே அமைந்த வில்லுண்டி தீர்த்தமாகும் (கடலின் நடுவே அமைந்த நன்னீர் கிணறு) .சேது ஸ்நானம் செய்பவர்கள் இங்குதான் செய்தல் வேண்டும்.



அதிசயம் 3: ( இராமநாதபுரம் மன்னர் முத்து விஜயரகுநாத சேதுபதியால் ஆரம்பிக்கப்பட்டு முத்துராமலிங்க சேதுபதி தமிழரால் கட்டி முடிக்கப்பட்டது)


உலகிலேயே நீளமான பிரகாரங்கள் கொண்டுள்ள இக்கோயிலின், கிழக்கு மற்றும் மேற்கு வெளிப் பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 400 அடிகள், வடக்கு மற்றும் தெற்கு வெளிப்பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 640 அடிகள் ஆகும். கிழக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 224 அடிகள் மற்றும் வடக்கு, தெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 352 அடிகளாலும். மொத்த பிரகாரங்களின் நீளம் 3850 அடி ஆகும். வெளிப்பிரகாரங்களில் மட்டும் 1212 கல்தூண்கள் அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் உள்ளன..


அதிசயம் 4: (உப்பு நீர் கடலின் மிக அருகே 22 விதமான நன்னீர் ஊற்று 22 விதமான சுவையுடன் இருப்பது தமிழர் கண்டுபிடிப்பு)


இராமேஸ்வரம் திருக்கோயிலின் பிரகாரத்தில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமையும்


1.மஹாலெட்சுமி தீர்த்தம்: அனுமார் கோவிலுக்கு தெற்குப் புறம் உள்ளது தர்மராஜன் ஸ்நானம் செய்து ஐஸ்வரியம் பெற்றது 


2.சாவித்திரி தீர்த்தம்: அனுமார் கோவிலுக்கு மேல் புறம் உள்ளது காசிபர் மகாராஜா சாபம் நீங்கியது 


3.காயத்திரி தீர்த்தம்: அனுமார் கோவிலுக்கு மேல் புறம் உள்ளது காசிபர் மகாராஜா சாபம் நீங்கியது 


4.சரசுவதி தீர்த்தம்: அனுமார் கோவிலுக்கு மேல் புறம் உள்ளது காசிபர் மகாராஜா சாபம் நீங்கியது 


5.சேதுமாதவ தீர்த்தம்: மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தெப்பக்குளம் லெக்ஷ்மி விலாசமும், சித்த சுத்தியும் பெறுவர் 


6.கந்தமாதன தீர்த்தம்: சேதுமாதவர் கோயில் பகுதியில் உள்ளது மகா தரித்திரம் நீங்கி சகல ஐஸ்வரியமும் பெற்று பிரம்மஹத்தியாதி பாபநிவர்த்தி பெறுவர் 


7.கவாட்ச தீர்த்தம்: சேதுமாதவர் கோயில் பகுதியில் உள்ளது நரகத்திற்குப் போகமாட்டார்கள் 


8.கவாய தீர்த்தம்: சேதுமாதவர் கோயில் பகுதியில் உள்ளது கற்பக விருச்ச வாசம் 


9.நள தீர்த்தம்: சேதுமாதவர் கோயில் பகுதியில் உள்ளது சூர்ய தேஜஸை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர் 


10.நீல தீர்த்தம்: சேதுமாதவர் கோயில் பகுதியில் உள்ளது சமஸ்த யாக பலனையும் அடைந்து அக்னி யோக பதவியை அடைவார்கள் 


11.சங்கு தீர்த்தம்: கோவில் உட்பிரகாரத்தில் உள்ளது வத்ஸ் நாப முனிவர் செய் நன்றி மறந்த பாவம் நீங்கியது 


12.சக்கர தீர்த்தம்: கோவில் உட்பிரகாரத்தில் உள்ளது சூரியன் பொன் கை பெற்றது 


13.பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்: கோவில் உட்பிரகாரத்தில் உள்ளது பிரம்மஹத்தியாதி பாவங்கள் நிவர்த்தி 


14.சூரிய தீர்த்தம்: கோவில் உட்பிரகாரத்தில் உள்ளது திரிகால ஞானமும் அந்தந்த உலகப் பிராப்தியும் உண்டாகும் 


15.சந்திர தீர்த்தம்: கோவில் உட்பிரகாரத்தில் உள்ளது திரிகால ஞானமும் அந்தந்த உலகப் பிராப்தியும் உண்டாகும் 


16.கங்கா தீர்த்தம்: கோவில் உட்பிரகாரத்தில் உள்ளது ஞானசுருதி ராஜன் ஞானம் பெற்றது 


17.யமுனா தீர்த்தம்: கோவில் உட்பிரகாரத்தில் உள்ளது ஞானசுருதி ராஜன் ஞானம் பெற்றது 


18.கயா தீர்த்தம்: கோவில் உட்பிரகாரத்தில் உள்ளது ஞானசுருதி ராஜன் ஞானம் பெற்றது 


19.சிவ தீர்த்தம்: கோவிலுக்குள் நந்தி தேவருக்கு தென்புறம் உள்ளது பைரவர்பிரம்ம ஹத்தி நிவர்த்தியானது 


20.சாத்யமிர்த தீர்த்தம்: அம்மன் சன்னதியில் உள்ளது புருரூனு சக்கரவர்த் திக்கு சாபம் நீங்கியது 


21.சர்வ தீர்த்தம்: ஸ்ரீ இராமநாத சுவாமி சன்னதிக்கு முன்னால் சுதரிசனர் பிறவிக் குருடும், நோயும் நரை திரையும் பலமற்ற சரீரமும் நீங்கி வளமடைந்தது. 


22.கோடி தீர்த்தம்: கோவில் முதல் பிரகாரத்தில் உள்ளது ஸ்ரீ கிருஷ்ண பகவான் மாமனாகிய கம்ஸனைகொன்ற பாவம் நீங்கியது.


அதிசயம் 5:

உலகில் அனைத்து கடற்கரையிலும் அலை ஆக்ரோஷமாக அடிக்கும். ஆனால் இராமேஸ்வரம் கோயில் வாசலில் உள்ள அக்னி தீர்த்த கடல் பகுதியில் மட்டும் அலையே அடிப்பதில்லை. ஆற்று நீர் போலவே இருக்கும்.


ஒரு முறை நீங்களும் வந்து பாருங்களேன் சுவாமி இராமநாதரையும் அதிசயங்களையும்.


நாளை வேறொரு கோயில் அதிசயத்துடன் சந்திக்கும்வரை சிந்தித்திருப்போம்.


ஓம் நமசிவாய…


சுந்தர்ஜி

தமிழன் திமிரானவன்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக